அனஸ்தீசியா..

அனஸ்தீசியா.
கேலனின் கருநிற பித்த நீர் கூற்று பொய் என்றாகிப் போனபின், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணமாக்குவது என்பது ஒரளவு சாத்தியமே என்று அனைத்து மருத்துவர்களும் கருதினர். ஆனால், மருத்துவ உலகம், அத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை.
1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜான் ஹண்டர், லண்டனில் இருந்த தனது மருத்துவமனையில் தனது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கான முன்னோட்டமாக, அவர் பல நூறு மனித பிணங்களுக்கும், இறந்த விலங்குகளின் உடலிலும் பல அறுவை சிகிச்சைகளை செய்து பார்க்கிறார். அவரின் இடைவிடாத பயிற்சியின் காரணமாக அவரால், மிக வேகமாக உடலின் பல பாகங்களை அறுத்து, உள்ளிருந்த கான்ஸர் கட்டியினை கைகளால் தொட முடிந்தது. ஒரு வேளை அந்த கட்டி அசைக்க முடியும் கட்டியாக இருப்பின், அதனை அறுவை சிகிச்சையின் மூலம் பத்திரமான அகற்றவும் முடிந்தது.
அந்த கட்டி அசைக்க முடிந்த கட்டியாக (movable) இருப்பின் மட்டுமே அவர் இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று பரிந்துரைத்தார். அந்த கட்டி அசைக்க முடியாத (immovable) கட்டியாக இருப்பின், அவர் அறுவை சிகிச்சையினை பரிந்துரைக்க வில்லை. அந்த கட்டியினை அறுத்து வெளிக் கொணரத் தேவைப்படும் நேரம் அதிகமாக தேவைப்படும். அத்தனை நேரம் நோயாளியால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்பதே அதற்கு காரணம். மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிராத காலம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1846 முதல்1867 வரையிலான காலகட்டத்தில், மருத்துவ உலகில் இரு பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அவற்றில் முதல் கண்டு பிடிப்பு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வகைகள்.
1846ஆம் ஆண்டு, மாசுச்செஸ்ட் பொது மருத்துவமனையில் உள்ள மைய மண்டபத்தில் சில நூறு மருத்துவர்கள் குழுமியிருந்தனர். அக்டோபர் மாதம் 16ஆம் தேதி, காலை பத்து மணியளவில் அந்த பரிசோதனை நிகழ்த்தப் பட்டது. பாஸ்டனில் இருந்த வந்திருந்த அந்த பல் மருத்துவர் வில்லியம் மார்ட்டன் ஒரு சிறிய புகை நிரம்பியிருந்த கண்ணாடி குப்பியிலிருந்து ஈத்தர் எனப்படும் திரவத்தை ஒரு குழாயின் வழியாக வெளிக் கொணர்ந்தார். அதிலிருந்து வெளிவந்த அந்தப் புகையினை, அங்கே படுக்க வைக்கப் பட்டிருந்த நோயாளினை முகரச் செய்தார்.
எட்வர்ட் அப்பாட் என்னும் அந்த நோயாளி அதை முகர்ந்த சில நொடிகளிலேயே ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று விட்டான். அப்போது, அங்கிருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், மிக வேகமாக செயல் பட்டு, அவனது கழுத்தின் ஒரு துளையிட்டு, அவனது தொண்டைக்குள்ளே இருந்த ஒரு பெரிய இரத்தக் கட்டியினை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார். உடன், அந்த இடத்தில் சில தையல்களும் போட்டு இரத்தத்தைக் கட்டுப் படுத்தினார். சில நிமிடங்கள் கழித்த எட்வர்ட் அப்பாட் கண் விழித்தான்.
எனக்கு அறுவை சிகிச்சை செய்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், அப்போது என்னால் கொஞ்சம் கூட வலியை உணர முடியவில்லை என்று பின்பு அங்கு கூடியிருந்த மருத்துவர்களிடையே கூறினான்.
உலகின் முதல் மயக்க மருந்து கொடுத்து வலி தெரியாமல் செய்யப் படும் அறுவை சிகிச்சை முறை அங்கே நடந்தேறியது. அந்த மைய மண்டபத்தில் இருந்த மருத்துவர்கள் மட்டுமல்லாது உலகின் பிற பகுதிகளில் இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு புதிய கதவு திறந்தது.
அனஸ்திசியா கண்டு பிடிக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை நிபுணர்களால், மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை, நீண்ட நேரம் செய்ய முடிந்தது. இது உடலின் பல நோய்களும் அறுவை சிகிச்சைகளின் மூலமாக குணமாக்குவதற்கு வழி வகுத்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவர்கள் கண்டு வந்த ஒரு அற்புத கனவு இதன் மூலம் நிறைவேறியது.